search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை மாநகராட்சி"

    • வீடுகளை சுற்றியும், ஒவ்வொரு தெருக்களிலும் கொசு மருந்து அடிக்கப்படும்.
    • சென்னையில் 1,600 மழை நீர் கால்வாய்கள் உள்ளன.

    சென்னை:

    மழைக்காலம் முடிந்து மீண்டும் வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் வேளையில் கொசுக்களின் உற்பத்தியும் பெருகி உள்ளது. பருவ காலம் தற்போது மாறி வரும் நிலையில் சென்னையில் கொசுக்கடி பாதிப்பும் பெருகியுள்ளது.

    பனியும் குளிரும் குறைந்து வெப்பம் அதிகரிக்க தொடங்கிய நிலையில், இனி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகும் என்பதால் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டு உள்ளது.

    கொசுக்கள் உற்பத்தியும் கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாயில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொண்டால் சென்னை மக்களை கொசுக்களின் பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம் என்ற அடிப்படையில் இந்த பணியை இந்த மாதம் இறுதியில் தொடங்க அதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    சென்னையில் 248 கி.மீ. தூரத்திற்கு நீர்வழிப் பாதைகள் உள்ளன. இவற்றில் 'டிரோன் மூலம் கொசு மருந்து அடித்து கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர சிறிய கால்வாய்களிலும் கொசுக்களின் பெருக்கத்தை தடுக்கப்பட உள்ளது. 6 டிரோன்கள் மூலம் நவீன தொழில் நுட்பத்தில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.


    இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    மிச்சாங் புயல், மழையால் கொசு ஒழிப்பு பணி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த மாதம் இறுதியில் மீண்டும் கொசு ஒழிப்பு பணி தீவிரப்படுத்தப்பட உள்ளது. நீர்நிலைகளில் படகுகளில் சென்று குப்பைகளை அகற்றுதல், ஆகாய தாமரை அகற்றப்படும். சென்னையில் ஓடும் முக்கிய 3 நீர்நிலைகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுக்க முழுவீச்சில் பணி மேற்கொள்ளப்படும்.

    இது தவிர 3,300 பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வார்டுகளிலும் கொசு ஒழிப்பு பணி செய்யப்படுகிறது. வீடுகளை சுற்றியும், ஒவ்வொரு தெருக்களிலும் கொசு மருந்து அடிக்கப்படும்.

    மேலும் கொசுக்கள் உற்பத்தி யாகும் மழை நீர் கால்வாய்களில் அடைப்புகளை திறந்து கொசு மருந்து அடிக்கப்படுகிறது. வரும் நாட்களில் கொசுக்கள் இன்னும் பெருகுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    அதனால் அவற்றை தொடர்ந்து மருந்து அடிப்பதன் மூலம் ஒழிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் 1,600 மழை நீர் கால்வாய்கள் உள்ளன. தற்போது கூடு தலாக 600 கால்வாய்கள் கட்டப்பட்டு மொத்தம் 2,200 கால்வாய் கள் வழியாக மழைநீர் வெளியேறுகிறது.

    மழைக் காலங்களில் கொசு பொதுவாக பெருகுவது இல்லை. மழை முடிந்த பிறகு தான் அதிகளவில் உற்பத்தியாகும். மழை நீர் கால்வாய்களின் மூலம் தான் கொசுக்கள் உற்பத்தியாகின்றன.

    மழை நீர் கால்வாய்களில் தற்போது தண்ணீர் தேங்கி நிற்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும். ஓட்டல்கள், டீக்கடைகள், தொழில் நிறுவனங்களின் கழிவு நீர் மழைநீர் கால்வாய்களில் விடப்படுவதால் மழை இல்லாத காலத்தில் கொசு உற்பத்திக்கு காரணமாக அமைகிறது.

    எனவே மழைநீர் கால் வாய்களில் தேங்கியுள்ள நீரை அப்புறப்படுத்தினால் கொசுக்கள் உற்பத்தி ஆவதை தடுக்க முடியும். மாநகராட்சி அதிகாரிகள் மழை நீர் கால்வாய்களையும் இக்காலக் கட்டத்தில் கண்காணிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • எந்த பணியை செய்யக்கூறினாலும் வடசென்னை வளர்ச்சி நிதியில் செய்கிறோம் என அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.
    • எந்த திட்டங்களுக்கு எந்த பணம் ஒதுக்கப்படுகிறது என்ற விவரமும் தெரியவில்லை என்றார்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார் கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டம் தொடங்கியதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் ஜெயராமன் பேசியதாவது:-

    எனது வார்டில் புயலால் 100-க்கும் மேலான மின் கம்பங்கள் சாய்ந்தன. முருகப்பா நகர் குளத்தில் மின் கம்பங்கள் அமைக்கும் பணி இதுவரை நடைபெறவில்லை. இதனால் இருள் சூழ்ந்துள்ளது. மேயருக்கு அதிகாரிகள் தவறான தகவல்களை கொடுக்கிறார்கள்.

    எந்த பணியை செய்யக்கூறினாலும் வடசென்னை வளர்ச்சி நிதியில் செய்கிறோம் என அரசு அதிகாரிகள் கூறுகிறார்கள்.

    எந்த திட்டங்களுக்கு எந்த பணம் ஒதுக்கப்படுகிறது என்ற விவரமும் தெரியவில்லை என்றார்.

    தனியரசு (மண்டல தலைவர்): வட சென்னை வளர்ச்சி நிதி ரூ.1000 கோடி சி.எம்.டி.ஏ. ஒதுக்கியது. அந்த நிதியில் என்ன பணிகள் செய்யப்படுகிறது. அது என்ன திட்டம், எந்தெந்த பணிகளுக்கு அதில் இருந்து நிதி ஒதுக்குகிறீர்கள்.

    மகேஷ்குமார் (துணை மேயர்): 30 தொகுதிகளுக்கு அந்த திட்டத்தில் வேலை செய்வதாக கூறுகிறார்கள். அது என்ன வேலை என்று தெரியவில்லை.

    ராதாகிருஷ்ணன்: மாநில அரசு சார்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. சி.எம்.டி.ஏ. மூலம் வளர்ச்சி நிதி தரப்படுகிறது. இது பல்வேறு துறைகளுக்கு செலவிடப்படும். எந்தெந்த பணிகளுக்கு இந்த பணம் ஒதுக்கப்படும் என்ற தகவலை இன்றைய கூட்டம் முடிந்த பின்னர் நான் உறுப்பினர்களுக்கு தருகிறேன்.

    டில்லிபாபு: (காங்கிரஸ்) கொடுங்கையூரில் குப்பை கிடங்கில் பயோமைனிங் திட்டப்படி குப்பைகள் மறு சுழற்சி செய்யப்பட்டு இடம் மீட்கப்படும் என மன்ற கூட்டத்தில் கடந்த ஆண்டு கூறினீர்கள். ஆனால் இதுரையில் எந்த பணியும் அங்கு நடைபெறவில்லை. அந்த திட்டம் என்ன ஆனது?

    மேலும் இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு சுடுகாடு அமைத்து தரப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இந்து சுடுகாடு பணிகள் மட்டும் மெதுவாக நடைபெறுகிறது. மற்ற சுடுகாடு பணிகள் நடைபெறவில்லை.

    மேயர் பிரியா:- வெகு விரைவில் குப்பை கிடங்கு பயோமைனிங் திட்டம் தொடங்கப்படும். 2 வருடத்தில் முடிக்கப்படும்.

    பரிதி இளம் சுருதி: பேரிடர் காலத்தில் வார்டுகளில் பணிகள் செய்யும் போது ஒரு பகுதி பாதிக்கிறது. அதனால் ஒரு வார்டுக்கு 2 உதவி பொறியாளர்கள் நியமிக்க வேண்டும்.

    சுகன்யா செல்வம் (காங்கிரஸ்): சூளைமேடு பகுதியில் மழைக்கு பிறகு சாலைகள் புதிதாக போடப்பட்டது. அந்த சாலைகளை மின்வாரிய ஊழியர்கள் எந்த அனுமதியும் இல்லாமல் வெட்டி பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

    கமிஷனர் ராதாகிருஷ்ணன்: இது தவறான செயல். அனுமதி இல்லாமல் சாலைகளில் கை வைக்கக்கூடாது. இது தொடர்பாக துறை செயலாளர்களிடம் பேசுகிறேன்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. கூட்டத்தில் 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • மொத்தம் 4 ஆயிரம் பேர் சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் தற்போது கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இதையடுத்து சென்னை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால்களில் கொசு மருந்து தெளிப்பதை தொடங்குமாறு மலேரியா ஒழிப்பு பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இதையடுத்து மலேரியா ஒழிப்பு பணியாளர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தண்ணீர் தேங்கி நிற்கும் அனைத்து மழைநீர் வடிகால்களிலும் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2,600 தொழிலாளர்கள் உள்பட மொத்தம் 4 ஆயிரம் பேர் சென்னையில் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் சென்னை நகரம் முழுவதும் புகை அடித்தும், மருந்துகளை தெளித்தும் கொசுக்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    சென்னையில் கொசுத்தொல்லை அதிகமாக காணப்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மழைநீர் வடிகால்கள் இருப்பதால் அங்கு தொடர்ந்து மருந்து தெளிக்கப்பட வேண்டும். வடகிழக்கு பருவமழை ஓய்ந்த பிறகும் மழைநீர் வடிகால்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை நீரை வெளியேற்றினாலும் கூட அந்த வழியாக கழிவுநீர் செல்கிறது. எனவே கொசு ஒழிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் இன்றும், நாளையும் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.
    • குடிநீர், கழிவுநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அரசு சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில், "மக்களுடன் முதல்வர்" சிறப்பு திட்ட முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் இன்றும், நாளையும் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் நடைபெறுகிறது.

    திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூ, அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூரில் முகாம் நடைபெறுகிறது.

    இம்முகாமில், சொத்துவரி, குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம், குடிநீர், கழிவுநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனு அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வடிகால் பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது.
    • பணிகள் நிறைவடைய எவ்வளவு காலம் ஆகும்.

    சென்னை:

    கடந்த டிசம்பர் மாதம் மிச்சாங் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகள், தெருக்களில் தேங்கிய வெள்ளம் வடிய காலதாமதம் ஆனது. மழை நீர் வடிகால் அமைத்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது எப்படி என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் எழுப்பிய நிலையில் இதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு இருந்தது

    இந்நிலையில், சென்னையில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    வடிகால் பணிகளுக்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டிருக்கிறது, எந்தெந்த நிதிகளின் கீழ் பணிகள் நடைபெற்றது, பணிகள் நிறைவடைய எவ்வளவு காலம் ஆகும், வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் என்ன உள்ளிட்ட தகவல்களுடன் விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள், தீங்கு விளைவிக்கக்கூடிய வீட்டு உபயோக குப்பைகள் என 3 வகையாக பிரித்து பெறப்படுகிறது.
    • குப்பைகளை பிரித்து வழங்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை பெருநகரை தூய்மையான நகரமாக மாற்ற மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குப்பை இல்லா தெருக்கள், சாலைகளை மாற்றி அழகுப்படுத்தப்படுகிறது.

    சென்னையில் 35 ஆயிரம் தெருக்கள் உள்ளன. இந்த தெருக்கள் மற்றும் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும், இயற்கை உரம், பயோகியாஸ் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. இதற்காக சென்னையில் தனியார் நிறுவனங்கள் பிளாண்ட் அமைக்கப்பட்டு உள்ளது.

    மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள், தீங்கு விளைவிக்கக்கூடிய வீட்டு உபயோக குப்பைகள் என 3 வகையாக பிரித்து பெறப்படுகிறது. வீடுகள், ஓட்டல்கள், கடைகள், தொழில் நிறுவனங்கள் என தனித்தனியாக பிரித்து குப்பைகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    சென்னையில் நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. சேகரிக்கின்ற குப்பைகள் இயற்கை உரம், இயற்கை எரிவாயு மற்றும் மறுசுழற்சி செய்யவும், பதப்படுத்தவும் அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் குப்பை கிடங்குகளில் குவியும் குப்பை குறைக்கப்பட்டு சுற்றுப்புற சூழல் பாதுகாக்கப்படும்.

    அந்த வகையில் வீடு வீடாக குப்பைகளை தரம் பிரித்து தூய்மை பணியாளர்கள் வாங்குகிறார்கள். மக்கும் குப்பைகள் தனியாகவும், மக்காத குப்பை தனியாகவும் பெறப்படுகிறது.

    மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என வகையாக பிரித்து பொதுமக்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தனித்தனி பைகளில் குப்பைகளை சேகரித்து வருகின்றனர்.

    இதன்மூலம் எளிதாக தரம் பிரித்து மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும், பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுகிறது. தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள் கொடுங்கையூர், பெருங்குடியில் உள்ள பிரதான குப்பை கிடங்கில் மொத்தமாக கொட்டப்பட்டு வந்த நிலையில் அதனை மாற்றி மக்கும் குப்பையில் இருந்து இயற்கை எரிவாயு, பயோகியாஸ் தயாரிக்கப்படுவதால் குப்பைகள் தேக்கம் ஆவது இல்லை.

    இந்த நிலையில் மழை வெள்ள பாதிப்பில் இருந்து குப்பைகளை பிரித்து வாங்குவதில் சுணக்கம் ஏற்பட்டது. வீடுகளில் தேங்கிய தேவையற்ற கழிவுகளை மக்கள் கொட்டினார்கள். குப்பைகளை பிரித்து வழங்காமல் மொத்தமாக கொட்டி வருகின்றனர்.

    இதனை தவிர்க்க மாநகராட்சி சுகாதாரத்துறை மீண்டும் வீடு வீடாக நோட்டீஸ் வினியோகித்து வருகிறது. "என் குப்பை என் பொறுப்பு" என நகரை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தர வேண்டும் என வலியுறுத்தி விழிப்புணர்வு நோட்டீஸ் கொடுக்கப்படுகிறது.

    அதில் குப்பைகளை பிரித்து வழங்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. தனிநபர் வீடுகளுக்கு ரூ.100, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.1000, பெருமளவு குப்பை உருவாக்குபவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறுபவர்களுக்கு கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 5.64 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
    • மழைக்கு பின் தொற்றுநோய் எதுவும் பரவவில்லை.

    சென்னை :

    சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சென்னை மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் 100 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்துவிட்டன. சென்னை மாநகராட்சியில் விரிவுபடுத்தப்பட்ட பகுதிகளில் 42 சதவீத வடிகால் பணிகள் முடிந்துள்ளன.

    கடந்த இரண்டரை ஆண்டுகளில் 876 கிலோ மீட்டருக்கு மழைநீர் வடிகால்கள் போடப்பட்டுள்ளன. 876 கி.மீ. பணிகள் நடைபெற்றதால் தான் 60 விழுக்காடு தண்ணீர் 48 மணி நேரத்திற்குள் வடிந்தது.

    சென்னையில் மருத்துவ முகாம்கள் மூலம் 5.64 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளனர். மழைக்கு பின் தொற்றுநோய் எதுவும் பரவவில்லை. மருத்துவ முகாம்கள் தொடரும் என்றார்.

    • தெருக்களில் துர்நாற்றம் வீசுகிறது. போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.
    • குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பல மின் சாதன பொருட்களும் நாசமானது.

    சென்னை:

    'மிச்சாங்' புயல் காரணமாக பெய்த பலத்த மழை காரணமாக சென்னை வெள்ளத்தில் மிதந்தது. இதனால் தரைதளத்தில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. பல வீடுகளில் 6 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றது.

    இதனால் வீடுகளில் உள்ள மெத்தை, சோபா, கட்டில், நாற்காலி, மேஜை, துணிமணிகள், புத்தகங்கள் ஆகியவை சேதம் அடைந்தன. மேலும் பல வீடுகளில் டி.வி, வாஷிங் மிஷின், குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பல மின் சாதன பொருட்களும் நாசமானது.

    வெள்ளம் வடிந்த பிறகு வீடுகளுக்கு திரும்பிய மக்கள் மழை வெள்ளத்தால் சேதமான சோபா, மெத்தை உள்ளிட்ட பொருட்களை வீடுகளுக்கு வெளியே உள்ள தெருக்களிலும், அருகில் உள்ள குப்பை தொட்டிகளிலும் வீசினார்கள். இதன் காரணமாக சென்னையில் உள்ள சாலைகள் மற்றும் தெருக்களில் அதிக அளவில் குப்பைகள் தேங்கி காணப்படுகிறது. இதனால் தெருக்களில் துர்நாற்றம் வீசுகிறது. போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது.

    எனவே வீடுகளில் மழையால் சேதம் அடைந்த மெத்தை, சோபா, கட்டில் உள்ளிட்ட பொருட்களை அருகில் உள்ள குப்பை தொட்டிகள் மற்றும் சாலைகளில் வீச வேண்டாம் என்றும், மாநகராட்சியின் வாகனத்தை போன் செய்து அழைத்தால் அவர்கள் வீட்டிற்கே வந்து சோபா, மெத்தை உள்ளிட்ட கழிவு பொருட்களை சேகரித்து செல்வார்கள் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி, எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    வீடுகளில் மழைநீரால் சேதம் அடைந்த சோபாக்கள், மெத்தை உள்ளிட்ட பொருட்களை குப்பை தொட்டி அல்லது தெருக்களில் வீசி போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம். கட்டணம் இல்லாத தொலை பேசி எண்ணான 18005712069 என்ற எண்ணில் அழைத்தால் உங்கள் வீட்டுக்கே வந்து குப்பை கழிவுகளை சேகரித்து செல்வார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • மாநகராட்சி பூங்காக்களில் நடைபயிற்சி செல்பவர்கள் கடந்த 10 நாட்களாகவே தவித்தனர்.
    • கனமழை எச்சரிக்கை திரும்பபெறப்படும் வரை மாநகராட்சி பூங்காக்கள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் மொத்தம் 786 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காங்களில் தினமும் காலையிலும், மாலையிலும் ஏராளமான பொதுமக்கள் நடைபயிற்சி செல்வது வழக்கம். குறிப்பாக ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினருமே நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள்.

    மேலும் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து மாநகராட்சி பூங்காக்களில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் விளையாட விடுவார்கள். மேலும் ஆண்கள், பெண்கள் அனைவருமே பூங்காக்களில் உள்ள உடற்பயிற்சி சாதனங்களை பயன்படுத்தி உடற்பயிற்சியும் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் மிச்சாங் புயல் காரணமாக பெய்த பலத்த மழையால் சென்னை நகரமே வெள்ளக்காடானது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதையடுத்து மிச்சாங் புயல் வருவதற்கு முன்பே சென்னையில் உள்ள பூங்காக்கள் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி மூடப்பட்டன. கனமழை எச்சரிக்கை திரும்பபெறப்படும் வரை மாநகராட்சி பூங்காக்கள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

    இதையடுத்து மாநகராட்சி பூங்காக்களில் நடைபயிற்சி செல்பவர்கள் கடந்த 10 நாட்களாகவே தவித்தனர். பொதுமக்களும் குழந்தைகளுடன் மாலை நேர பொழுது போக்குக்கு இடமில்லாமல் அவதிப்பட்டனர். மழை ஓய்ந்து இயல்பு நிலை திரும்பியுள்ளதால் பூங்காக்களை திறக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள அனைத்து பூங்காக்களும் இன்று திறக்கப்பட்டன. பல பூங்காக்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. நடைபயிற்சி செல்லும் பாதைகளில் முறிந்து விழுந்து கிடக்கும் மரங்களில் கிளைகள் முதலில் அகற்றப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சி செல்வதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.

    இதையடுத்து இன்று காலை முதலே ஏராளமான பொதுமக்கள் பூங்காக்களில் நடைபயிற்சி மேற்கொண்டனர்.

    • சென்னையில் மழைநீர் வடியாமல் 2 நாட்களுக்கு மேலாக நின்ற பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
    • அரும்பாக்கம், கொருக்குப்பேட்டை எழில் நகரில் உள்ள எம்.எம்.டி.ஏ. ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    சென்னை:

    சென்னையில் பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகள் மட்டுமின்றி பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பாதித்தது. மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்ட பகுதியிலும் வெள்ளம் நீர் சீராக செல்லவில்லை. ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டதால் 3 நாட்களுக்கு மேலாக தண்ணீர் தேங்கி நின்றது.

    இதுவரையில் இல்லாத அளவிற்கு பல பகுதிகளில் தண்ணீர் வடிய பல நாட்கள் நீடித்தது. குறிப்பாக சென்னை நகரின் முக்கிய பகுதிகளில் வெள்ளம் விரைவாக வடியாமல் சிறிது சிறிதாக வடிந்தது.

    இதனால் மக்கள் பெரும் சிரமங்களுக்கு ஆளானார்கள். மழைநீர் வடிகால் இருந்த போதிலும் பரவலாக வெள்ளம் சூழ்ந்து நின்ற பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுத்தனர்.

    தண்ணீர் தேங்கியதற்கான காரணம் என்ன? என்பது பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். 363 பகுதிகளில் 2 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வடியாமல் தேங்கி நின்றுள்ளது. அந்த பகுதிகளை ஆய்வு செய்து மழை நீர் இனி தேங்காமல் இருக்க என்ன வழிமுறைகள், மாற்று திட்டங்களை கொண்டு செயல்படுத்தலாம் என ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.


    நகரின் மையப் பகுதிகளில் பல நாட்களாக வெள்ளம் தேங்கி நின்றது. சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய் பணிகள் நிறைவு பெற்றாலும் கூட இந்த மழையால் தண்ணீர் தேங்கி நின்றததற்கான காரணம் என்ன? மழை கால்வாய்கள் இணைப்பு முறையாக உள்ளதா? என பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதுபற்றி மாநகராட்சி துணை கமிஷனர் (பணிகள்) கூறியதாவது:-

    சென்னையில் மழைநீர் வடியாமல் 2 நாட்களுக்கு மேலாக நின்ற பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. 363 பகுதிகளில் தண்ணீர் வடியாமல் இருந்துள்ளது. அந்த பகுதிகளில் மழை நீர் வடியாமல் நின்றதற்கான காரணம் என்ன?

    எவ்வளவு நேரத்தில் எத்தனை செ.மீ. மழை பெய்தது என்பது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவற்றுக்கு நிரந்தர தீர்வு காண மாற்று நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பணி மழைக்காலம் முடிந்த பிறகு தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து மாநகராட்சி தலைமை என்ஜினீயர் ராஜேந்திரன் கூறியதாவது:-

    மழை நீர் வடிகால்வாய்கள் மற்றும் ஆறுகளில் உள்ள அடைப்புகள், கால்வாயின் அளவு, அதன் ஆழம் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும். கோடம்பாக்கத்தில் உள்ள அஜிஸ்நர், டெமெல்லோஸ் சாலை, புளியந்தோப்பு அருகில் உள்ள தெருக்கள், ரெட்டேரி ஏரிக்கு பின்புறம், மாதவரம், எம்.ஜி.நகர் சாலை, மணலியில் உள்ள சி.பி.சி.எல். நகர் உள்ளிட்ட சில பகுதிகள் இதில் அடங்கும்.

    அரும்பாக்கம், கொருக்குப்பேட்டை எழில் நகரில் உள்ள எம்.எம்.டி.ஏ. ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    அடுத்த வாரம் பெய்யும் மழை தண்ணீரை மோட்டார்கள் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஜனவரிக்கு பிறகு தான் சில பகுதிகளில் வெள்ளம் ஏன் புகுந்தது என ஆய்வு மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உணவுத்துறை கணக்கின்படி சென்னை மாவட்டம் 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுகிறது.
    • திருவள்ளூரில் 6.27 லட்சம், காஞ்சிபுரத்தில் 4.01 லட்சம், செங்கல்பட்டில் 4.38 லட்சம் குடும்ப அட்டைதாரர்களும் உள்ளனர்.

    சென்னை:

    சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிச்சாங் புயலால் கடும் வெள்ள சேதம் ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் மக்கள் பெரிய அளவில் சிரமப்பட்டனர். லட்சக்கணக்கானோர் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொருட்கள் அனைத்தையும் இழந்து தவிக்கின்றனர்.

    அதிலும் குறிப்பாக அடையாறு, கூவம், கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் வசித்தவர்களும் ஏரி-கால்வாய் நீர்நிலைகள் அருகே வசித்தவர்களும் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் 2 நாட்களில் சகஜ நிலைக்கு திரும்பி விட்டனர்.

    இந்த நிலையில் புயல்-வெள்ளத்தால் வாழ்வாதாரம் இழந்தோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

    அதுமட்டுமின்றி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்குவதாகவும் சேதம் அடைந்த குடிசைகளுக்கு ரூ.8 ஆயிரம், உயிரிழந்த மாடுகளுக்கு ரூ.37 ஆயிரத்து 500, ஆடுகளுக்கு ரூ.4 ஆயிரம், முழுமையாக சேதம் அடைந்த கட்டு மரங்களுக்கு ரூ.50 ஆயிரம், சிறிது சேதம் அடைந்திருந்தால் ரூ.15 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இதுதவிர பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கும் ஹெக்டேருக்கு ரூ.17 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புயலால் சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளதால் எந்தெந்த ஏரியா கடுமையாக பாதிக்கப்பட்டது என்ற விவரம் தாலுகா அலுவலகம் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சென்னையையொட்டிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பகுதிகளும் மழைநீரில் தத்தளித்ததால் அந்த பகுதிகளும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

    இதில் உணவுத்துறை கணக்கின்படி சென்னை மாவட்டம் 2 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. அதில் தென் சென்னையில் 11 லட்சத்து 51 ஆயிரத்து 858 குடும்ப அட்டைதாரர்களும் வடசென்னையில் 10 லட்சத்து 66 ஆயிரத்து 463 குடும்ப அட்டைதாரர்களும் என மொத்தம் 22 லட்சத்து 18 ஆயிரத்து 121 குடும்ப அட்டைகள் உள்ளது.

    இதே போல் திருவள்ளூரில் 6.27 லட்சம், காஞ்சிபுரத்தில் 4.01 லட்சம், செங்கல்பட்டில் 4.38 லட்சம் குடும்ப அட்டைதாரர்களும் உள்ளனர். இவர்களில் சென்னையையொட்டி உள்ள புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே நிவாரண உதவி தொகை கிடைக்கும் என தெரிகிறது.

    மொத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 95 சதவீதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் பணம் கிடைக்கும். மற்ற 3 மாவட்டங்களுக்கு 60 சதவீதம் பேர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் மொத்தம் 27 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும் என தெரிகிறது.

    இது சம்பந்தமாக தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட உள்ளது. அதில் யார்-யாருக்கு பணம் கிடைக்கும் என்பது தெளிவுப்படுத்தப்படும். அரசாணையில் உள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கை உயரவும் வாய்ப்பிருக்கிறது.

    சென்னை மாநகராட்சி பகுதியில் 16 தாலுகா அலுவலகம் உள்ளது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு ரூ.6 ஆயிரம் கிடைத்து விடும்.

    குறிப்பாக வருமான வரி செலுத்துபவர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பெரும் தொழில் அதிபர்கள் தவிர்த்து மற்ற பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரம் கிடைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    அதே சமயம் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த சென்னைக்கு மிக அருகில் உள்ள பகுதிகள் அதில் வசிக்கக்கூடிய மக்கள் மட்டுமே புயல் பாதிப்புகளை சந்தித்துள்ளனர். மேல் மருவத்தூர், உத்தரமேரூர் போன்ற உள்புற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    எனவே அதுபோன்ற பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு நிவாரண தொகை கிடைக்காது. எனவே யாரெல்லாம் உண்மையாக பாதிப்புகளை சந்தித்து வாழ்வாதாரங்களை இழந்துள்ளார்களோ அவர்களுக்கு மட்டுமே ரூ.6 ஆயிரம் வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

    எந்தெந்த பகுதிகள், தெருக்கள், பாதிக்கப்பட்டவை என வி.ஏ.ஓ., தாசில்தார்கள் பட்டியல் எடுத்து கலெக்டர்களிடம் தெரிவிப்பார்கள். அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு பட்டியல் அனுப்பி வைக்க உள்ளனர். அதன் அடிப்படையில் ரேஷன் கடைகள் மூலம் ரூ.6 ஆயிரம் பணம் வழங்கப்படும்.

    எந்த தேதியில் பணம் கொடுக்கப்படும் என்ற விவரம் விரைவில் அரசின் சார்பில் தெரிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வெள்ளத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.
    • 3 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    சென்னை:

    'மிச்சாங்' புயல் தாக்கத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் மழை வெள்ளம் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது.

    வெள்ளம் பாதித்த பகுதிகளில் தண்ணீர் வடிந்து விட்டதால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் பரவாமல் தடுக்க தமிழக சுகாதாரத்துறை முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

    வெள்ளம் மற்றும் வெள்ளத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய பாதிப்புகளை தடுக்க மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. காயம் அடைந்தவர்களுக்கு 'டெட்டனஸ் டாக்சாய்டு' செலுத்தப்படுகிறது. மேலும் மேல்நிலை தொட்டிகள், சம்புகளில் பிளீச்சிங் பவுடர் தெளிப்பதற்கு சுகாதாரத்துறை மூலம் பிளீச்சிங் பவுடர் வழங்கப்படுகிறது.

    வயிற்றுப்போக்கு, காய்ச்சல் போன்ற மழை நீர் மற்றும் நோய் கிருமிகளால் பரவும் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.


    பொதுமக்கள் இந்த சமயத்தில் பாதுகாப்பான குடிநீரை மட்டுமே குடிக்க வேண்டும். கொதிக்க வைத்த தண்ணீரை குடிப்பது நல்லது. தொற்று நோய்களை தடுக்க சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

    வெள்ளத்தில் நனைந்த உணவு பொருட்களை பயன்படுத்தக் கூடாது. யாருக்காவது காய்ச்சல் அல்லது வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ முகாம் உள்ளிட்ட அரசு சுகாதார நிலையங்களில் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். தனியார் டேங்கர் லாரி, திறந்த வெளி குளங்கள், கிணறுகளில் வெள்ள நீர் கலந்து இருக்க வாய்ப்பு இருப்பதால் அவற்றை குடிப்பது பாதுகாப்பானது அல்ல.

    சரியான அளவு குளோரின் உள்ள தண்ணீரை குடிப்பதற்கு பயன்படுத்த வேண்டும். குப்பை மற்றும் அழுகும் பொருட்களில் ஈக்கள் பெருகும். எனவே கழிவுகளை உடனே அகற்ற வேண்டும். இறந்த விலங்குகள் அல்லது பறவைகளை பாதுகாப்பாக அகற்ற வேண்டும்.

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் 9 மாதம் முதல் 15 வயது உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் முந்தைய நோய் தடுப்பு நிலையை பொருட்படுத்தாமல் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசியை ஒரு டோஸ் கொடுக்க வேண்டும். இது குறித்து பொதுசுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் இன்று 3 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. எலி காய்ச்சல், காலரா மற்றும் பிற தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க மக்கள் காய்ச்சிய நீரை குடிக்க வேண்டும். "டாக்னிகள்" என்ற நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரையை சாப்பிட்டால் காய்ச்சல், தொற்று நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். அனைத்து மருத்துவ முகாம்கள், சுகாதார நிலையங்களில் இந்த மாத்திரை வழங்கப்படுகிறது. பொது மக்கள் சுகாதாரத்துறையின் அறிவுரைகளை பின்பற்றினால் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×